செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அமலாக்கத்துறை, டாஸ்மாக் சோதனையின்போது ஒரே இரவில் ஆவணங்களை கணக்கிட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்வது எப்படி? என்று ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன் உள்ளிட்ட பலருக்கும் சொந்தமான இடங்களிலும் சோதனையை மேற்கொண்டனர். கிட்ட 2,3 நாட்களாக சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைகளை பிரதானப்படுத்தி தேசிய அளவில் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நிலையில்தான் இந்த சோதனை நடைபெற்றது. ஆனாலும் இந்த விவகாரத்தில் மக்களின் கவனம் திரும்பியதா என்றால் இல்லை. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கே.ஒய்.சி சரிபார்ப்பு இல்லாத நிறுவனங்களுக்கும், டெண்டர் நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமலும் டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையினர் ஒரு நிறுவனத்தில் போய் சோதனை நடத்துகிறார்கள். சோதனையின்போது சில ஆவணங்களை திரட்டுகிறார்கள். அவற்றை ஒருநாள் இரவோடு இரவாக படித்து, அதில் எங்கெங்கு முறைகேடுகள் உள்ளன? எப்படி எப்படி எல்லாம் முறைகேடு செய்திருப்பார்கள் என்று சரிபார்த்து மறுநாளே அறிக்கை தருகிறார்கள் ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் என்று. புகார்களின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தில் சோதனை நடத்துகிறார்கள். அப்போது அங்கு கிடைக்கும் ஆவணங்களை இரவோடு இரவாக படித்து அறிந்துகொண்டு, ஆயிரம் கோடி முறைகேடு என்று கணக்கிடும் அளவுக்கு மிகத்தீவிரமாக வேலை பார்த்துள்ளார்கள். அமலாக்கத் துறை வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுவோரின் எண்ணிககை மிக மிக குறைவாக உள்ளதற்கு காரணம் என்ன என்று நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது. அதற்கு சொல்லப்படும் பதில் என்ன என்றால் அமலாக்கத் துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அமலாக்கத் துறைக்கு அதிகாரங்கள் அதிகமாக இருந்தாலும் ஆட்கள் மிகவும் குறைவுதான். அதனால் அவர்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள் என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கிறார்கள். அப்படி ஆட்களே இல்லாத அமலாக்கத்துறை இரவோடு இரவாக இவ்வளவு வேலை பார்த்துள்ளது. அப்படி என்றால் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் தொடர்பு இல்லாமல் அல்லவா உள்ளது.
செந்தில்பாலாஜி மீதான வழக்கு என்பது நீதிமன்றத்தில் முழுமையாக விசாரிக்கப் பட்ட வழக்கு ஆகும். அதற்கு பிறகு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசத் தீர்வு முறையில் முடிந்தது. அதில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இல்லை என்று ஏற்கனவே பேசப்பட்டு, அந்த பிரச்சினையையே நீதிமன்றம் முடித்து வைத்து விட்டது. வேறு சிலர் மேல்முறையீடு செய்ததன் காரணமாக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று அமலாக்கத்துறை வருகிறார்கள். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளன. அவற்றை விசாரித்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அமலாக்கத்துறையால் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை. 20 நாட்களுக்கு ஒரு முறை வாய்தா வாங்கியுள்ளனர். இப்படி 2 ஆண்டுகளாக விசாரித்தவர்கள், ஒரே நாள் இரவில் கணக்கிட்டு ஆயிரம் கோடிகள் என்று சொல்லிவிட்டார்கள்.
இந்த விவகாரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது இரவு முழுவதும் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பாமல் சோதனை நடத்தினார்கள். இதற்கு அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, பணியாளர்களை எல்லாம் இரே வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக பதில் அளித்தனர். அப்போது நீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்ததற்காக அமலாக்கத் துறைக்கு கண்டனங்களை தெரிவித்த நீதிபதிகள், 25ஆம் தேதி வரை வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் கண் முன்பு ஆதாரங்கள் உள்ளபோது, நாங்கள் இரவு முழுவதும் பணியாளர்களிடம் விசாரிக்கவில்லை என்று அமலாக்கத்துறை பொய் சொல்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் அவ்வளவு சாதாரணமாக தீர்ப்புகளை வழங்க மாட்டார்கள். அவர்களே பொய் சொல்கிறார்கள் என்று சொல்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பு பதில் சொல்ல வேண்டும். டாஸ்மாக் வழக்கில் இவ்வளவு அவசர அவசமாக விசாரிக்கும் அமலாக்கத்துறை 2 வருட காலத்தில் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, விசாரணையை முடித்து அவருக்கு தண்டனையை பெற்று கொடுத்திருக்க வேண்டும்.
கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டது. இதன் படிதான் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தது. ஆனால் இந்த குற்றத்திற்கும் ஜாபர் சாதிக்கிற்கும் தொடர்பு உள்ளது என்று அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. அதன்காரணமாக தான் அவர் விடுவிக்கப்பட்டார். 2014ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்ததில் இருந்து 2025 வரையிலான 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை சார்பில் எம்.பி., எம்எல்ஏ மற்றும் அரசியல் தலைவர்கள் மீது 193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகள் மட்டும்தான் குற்றச்சாட்டு நிருபணமாகியுள்ளது. இதை தவிர வேறு யார் மீதும் குற்றச்சாட்டு நிரூபணமாக வில்லை. இதேபோல், அதானி துறைமுகத்தில் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் அதானி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்ததா?
அமலாக்கத்துறை போன்ற ஜனநாயக அமைப்புகளின் மீது நம்பிக்கை அற்றவர்களாக மக்களை மாற்றி, அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக்கொள்ள பாஜக முயற்சிக்கிறது. தமிழ்நாடு அரசு அப்படி அமைப்புகளின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறதா? அமைப்பின் நம்பிக்கையை மறு கட்டமைப்பு செய்வதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. சட்டம், ஒழுங்கு தொடர்பாக காவல்துறையின் மீது பல்வேறு புகார்கள் வருகிறது. நெல்லையில் முன்னாள் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை சுட்டுப்பிடித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. ஆனால் அமலாக்கத்துறை சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை மேற்கொண்டதா? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததா? குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்ததா? அல்லது ஜாமின் கொடுத்ததா? எந்தவித ஜனாநயகப்பூர்வமான நடவடிக்கையும் இல்லாமல் நிரந்தரமாக சிறையில் அடைப்பதற்கான வேலையை மட்டும் செய்துகொண்டிருக்கும் ஒரு அமைப்பாக மாற்றி வைத்துள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.