டிக்கெட் நகலை மெயில் அனுப்புங்கள்- ஏ.ஆர்.ரகுமான்
‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், arr4chennai@btos.in இ-மெயில் முகவரிக்கு டிக்கெட் நகலை அனுப்புமாறு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அடுத்த பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விற்கப்பட்டதால் நிற்கக்கூட இடமில்லாமல் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலரால் பங்கேற்கமுடியாமல் போனது. நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதது பற்றி வலைதளங்களில் பலர் ஆதங்கம் தெரிவித்த நிலையில் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. திட்டமிட்டதைவிட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும் ஏசிடிசி நிறுவனம் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “அசாதாரண சூழ்நிலையால் நேற்றைய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் நகலை arr4chennai@btos.in இ-மெயில் முகவரிக்கு அனுப்புங்கள். டிக்கெட் நகலுடன் ரசிகர்கள் தங்கள் குறைகளையும் கூறினால் எங்கள் குழு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், “இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன், நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனையடைந்தேன் . மறக்குமா நெஞ்சம் மக்கள் மனதில் நீண்ட காலம் இருக்கும், ஆனால், நல்ல நினைவுகளுக்காக அல்ல. கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்றபடி வரும் காலங்களில் சென்னை மாநகரம் தகவமைத்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் விழித்துக்கொள்ள, இன்று நானே பலிகிடா ஆகிறேன். சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.