சென்னையின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வந்துள்ளதாகவும், இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் தீவிரக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கோடை காலத்தில்கூட கட்டுப்படியாகக்கூடிய அளவில் வந்த மின்கட்டணம், தற்போது பன்மடங்கு அதிகரித்து சாமானிய மக்களை உலுக்கியுள்ளது.


1500 ரூபாயில் இருந்து ரூ.16,000 ஆக உயர்ந்த அதிர்ச்சி!
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த கெனித் ராஜ் என்ற பொதுமக்களின் பிரதிநிதி தனது வேதனையைப் பகிர்ந்து கொள்கையில், “வழக்கமாக கோடை காலத்தில் அதிகபட்சமாக 1500 ரூபாய்தான் மின்கட்டணம் வரும். ஆனால், தற்போது 16 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. அரசு வழங்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டாலும் கூட, கட்டணம் இவ்வளவு அதிகமாக வருவது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல மடங்கு மின் கட்டணம் அதிகரித்துள்ளது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், ‘மீட்டர் ரீடிங் என்ன வருகிறதோ அதனைத்தான் பதிவு செய்கிறோம்’ என்று பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
மயிலாப்பூரிலும் எதிரொலிக்கும் மின் கட்டண அதிர்ச்சி
இதேபோன்று, மயிலாப்பூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற பொதுமக்களும் தங்களது துயரத்தைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், “வழக்கமாக 3 ஆயிரம் ரூபாய் வரை வரும் மின்கட்டணம், இந்த ஆண்டு 4,500 ரூபாய் அதிகரித்து வந்துள்ளது. இது போதாதென்று மின்வெட்டு பிரச்சனையும் பெருமளவில் அதிகரித்துள்ளது; தினமும் குறைந்தது 1 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. மின்கட்டணம் இவ்வளவு அதிகமாக உயர்ந்தது குறித்து அதிகாரிகளிடம் முறையான விளக்கமோ பதிலோ இல்லை” என்றார்.
பொதுமக்களின் கோரிக்கை
200 யூனிட் இலவச மின்சாரம் நடைமுறையில் இருந்தும், வீடுகளுக்கு வந்துள்ள அதீத மின்கட்டண உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தமிழக அரசும் மின் வாரியமும் உடனடியாகத் தலையிட்டு, இந்த அதீத மின்கட்டண உயர்வுக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.
