சென்னையில் நகைக்கடையில் கொள்ளை மற்றும் திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக சென்னையில் போலீசார், விடிய விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு அந்த ஏ.டி.எம். களில் இருந்த 75 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தவும் , காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனை மற்றும் விடுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னையின் பிரதான பகுதிகளான அடையாறு, அண்ணாசாலை,கிண்டி, திருவல்லிக்கேணி,மண்ணடி, பெரிய மேடு, பிராட்வே, தேனாம்பேட்டை,நுங்கம்பாக்கம் என்று பல்வேறு பகுதிகளில் தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அந்த பகுதிகளில் உள்ள விடுதிகளிலும் அங்கு தங்கியுள்ளவர்கள் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டனர்.


