சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதியை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில்,சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது நடவடிக்கை விசாரணைக்கு பின்னரே எடுக்கப்படும் என்பதால் தாமதமானது. இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருட்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்தவர்களை ஏற்கனவே கைது செய்துள்ளோம். கஞ்சா வேட்டை, கஞ்சா வேட்டை 2.0, கஞ்சா வேட்டை 3.0 என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை விடுமுறை வழங்கவும், இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சவால்களை எதிர்கொள்ள காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.