சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மதுரவாயல், பைபாஸ் சர்வீஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆன்லைன் டெலிவரி ஊழியரை சந்தேகத்தின் பேரில் மடக்கினர். அவர் ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான தமிழ்செல்வம் (வயது25) என்பது தெரிந்தது. அவரது பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தமிழ்செல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 21 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தமிழ்செல்வம் செல்போன் மூலம் ஆர்டர் பெற்று உணவு டெலிவரி செய்வது போல வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நூதனமான முறையில் கஞ்சாவை சப்ளை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.


