அரசன் படத்தில் பிரபல ஹீரோ இணைந்து இருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிம்புவின் 49வது படமாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் ‘அரசன்’. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அனிருத் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படமானது வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்ஸாக உருவாகிறது. இதனை இரண்டு பாகங்களாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. அதே சமயம் கடந்த மாதம் இந்த படத்தின் ப்ரோமோ வெளியாகி இணையத்தை கலக்கி வந்தது. இதற்கிடையில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் படத்தில் நெல்சன், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது பிரபல ஹீரோ ஒருவர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அதாவது நடிகர் விஜய் சேதுபதி அரசன் திரைப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவின் இந்த சர்ப்ரைஸை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் இப்படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி இருக்கிறது.

விஜய் சேதுபதி ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அரசன் படத்தில் இவருடைய கதாபாத்திரம் எந்த மாதிரியான இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


