நான் விஜய் ரசிகன் மற்றும் கமல் ரசிகன் என்பதற்காக அவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்கள் ஒவ்வொருவராக அரசியலில் குதிப்பது வாடிக்கை. தமிழ் சினிமா வளரத் தொடங்கிய காலத்தில் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப்பிடித்த, புரட்சித் தலைவராக கொண்டாடப்பட்ட மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தார். ஆட்சியையும் பிடித்து மக்கள் மனதையும் வென்றார். இதையடுத்து, மறைந்த நடிகை ஜெயலலிதாகவும் அரசியல் பிரவேசம் செய்தார். இதையடுத்து புரட்சிக் கலைஞர் விஜயகாந்தும், அரசியலில் குதித்தார். தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலிலும் நின்றார். அண்மையில் அவர் மறைந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், கோலிவுட்டின் தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய், அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். இக்கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த அறிக்கைக்கு பிறகு நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் விஜய் அரசியலில் குதித்தது தொடர்பான கருத்தை தெரிவித்து வருகின்றனர். பலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இது குறித்து பேசிய நடிகர் அரவிந்த்சாமி, ரஜினி, கமல், விஜய் ஆகியோரை எனக்கு ஒரு ரசிகனாக பிடிக்கும். ஆனால், அதற்காக அவர்களுக்கு ஓட்டு போட மாட்டேன். ரசிகன் என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் தலைவராகவும், சிறந்த கொள்கைகளை பின்பற்றுபவராகவும் திறமை உள்ளதா என்ற புரிதலுக்கு பிறகு தான் வாக்களிப்பேன் என்று நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.