கூவத்தூர் விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு, நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்காக நடிகை திரிஷா, ஏ வி ராஜு மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து ஏ வி ராஜு மன்னிப்பு கோரினார். இருப்பினும் திரை துறையினர் பலரும் சக நடிகையை அவதூறாக பேசியது தொடர்பாக தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் சேரன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்த நிலையில் நடிகர் விஷால் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், “ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் நம் திரையுலகையைச் சேர்ந்த ஒருவரை பற்றி மிகவும் கேவலமாக பேசியதை கேள்விப்பட்டேன். உங்கள் பெயரையோ நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ நான் குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதை செய்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல திரையுலகில்
பரஸ்பர சக கலைஞர்களாகவும் இருக்கிறோம். உங்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும் நீங்கள் செய்த காரியத்திற்கு பிறகு உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களை வீட்டிற்கு திரும்ப வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த விவகாரத்தில் பதிலடி கொடுப்பதற்கு ஒரு ட்வீட் போடுவது எனக்கு உண்மையிலேயே வேதனையை அளிக்கிறது.
I just heard that a stupid idiot from a political party spoke very ill and disgustingly about someone from our film fraternity. I will not mention your name nor the name of the person you targeted because I know you did it for publicity. I definitely will not mention names…
— Vishal (@VishalKOfficial) February 20, 2024
நீங்கள் செய்தது முற்றிலும் அருவருப்பானது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் உங்களை கண்டிக்க விரும்பவில்லை. நரகத்தில் இதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிப்பீர்கள். நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. ஆனால் ஒரு மனிதனாக பூமியில் உங்களால் ஒருபோதும் இருக்க முடியாது. நிச்சயம் இது பிரபலங்களை பற்றிய எதிர்மறையான விளம்பரங்களில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஒரு யுக்தியாக மாறிவிட்டது. குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுங்கையாவது கற்றுக் கொள்ளுங்கள்” என்று இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.