கடந்த தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் அமரன். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. இந்த படமானது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டு வருகிறது. அதேசமயம் ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இவ்வாறு திரைக்கு வந்து 25 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. எனவே இந்த இமாலய வெற்றியை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட வெற்றி விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதன்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த வெற்றி விழாவை நடத்த அவரிடம் தேதி கேட்டிருப்பதாகவும் அவரது கையால் படக்குழுவினருக்கு கேடயம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே மு.க.ஸ்டாலின் தனது பதிலை சொன்னதும் அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசனை இந்தியாவிற்கு வரவழைத்து இந்த வெற்றி விழாவை சிறப்பாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.