தவெக-வின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்ராஜ், ஆர்எஸ்எஸ் – பாஜகவின் மொழியில் பேசுவதாவும், இது விஜய்க்கு தெரியாமல் இருந்தால் மிகவும் ஆபத்து என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
தவெகவின் கொள்கைபரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அதிபர் ஆட்சி முறைக்கு ஆதரவாகவும், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- நடிகர் விஜயின் தவெக-வில், முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் இணைந்துள்ளார். யார் வேண்டுமானாலும் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம். அரசியல் கட்சிகளில் ஓரங்கட்டப்பட்ட எம்எல்ஏ-க்கள், புதிய கட்சி தோன்றினால் அதில் சென்று இணைவது வழக்கமானது தான். ஆனால் ஐ.ஆர்.எஸ். அதிகாரி, அருண்ராஜ் தவெகவில் இணைந்துள்ளது முக்கியமானதாகும்.
ஏனென்றால் அவர் நிறைய எழுதியுள்ளார். பேசியுள்ளார். இந்துத்துவா லைனில் தான் தூக்கிப் பிடிக்கிறார் என்று நன்றாக தெரிகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு எதிராக பேசுகிறார். மாநில அளவில் குடியரசுத் தலைவர் முறையிலான ஆட்சி வர வேண்டும் என்று சொல்கிறார். குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள் இதை பேசுவார்களா? ஆனால் யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற அருண்ராஜ் பேசுகிறார். அதிபர் முறை ஆட்சி கொண்டு வந்தால் ஊழல் இல்லாமல் போய்விடுமா? அரசியல் நிர்ணய சபையிலேயே இதை விவாதித்து விட்டார்கள். அதிபர் முறை ஆட்சி கொண்டுவந்தால், அது மிக சுலபமாக சர்வாதிகார ஆட்சியில் போய் முடியும். அதனால் அதை வேண்டாம் என்றார்கள். இதுதான் பாஜகவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவுதான் இப்படி பட்டவர்கள் இதை பற்றி பேசுகிறார்கள்.
நிபுணர்கள் என்பவர்கள் பின்னால் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் தான் முன்னால் இருக்க வேண்டும். அமைச்சர்களுக்கு எதுவும் தெரியாது என்பது மிகவும் அபத்தமான எண்ணமாகும். மக்களின் மனநிலை என்பது அவர்களுக்கு தான் தெரியும். இது மேட்டுக்குடித்தனமான அரசியலாகும். அரசியலை ஜனநாயகம் அற்றதாக மாற்றுவதுதான் இதுபோன்ற பேச்சுகள் எல்லாம். ஆர்எஸ்எஸ் – பாஜகவினருக்கு ஜனநாயகத்தின் மீதோ, நாட்டின் பன்முகத்தன்மை மீதோ நம்பிக்கை கிடையாது. இந்தியாவில் ஆட்சி முறை என்பது நாடாளுமன்ற முறையிலான ஜனநாய ஆட்சியாகும். இங்கு பிரதமர், முதலமைச்சர் என்று தனி நபர்களுக்கு வாக்களிப்பதே கிடையாது. நடைமுறையில் இதை மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. அதைதான் அருண்ராஜ் மாநில அளவில் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
அருண்ராஜின், ராஜினாமா கடிதத்தை மின்னல் வேகத்தில் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை பார்த்தால் அவர் யார் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும். ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலின், ராஜினாமாவை ஏற்க 5 வருடங்கள் வரை ஆனது. போராடி தான் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இல்லாவிட்டால் அவர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. ஆனால் அருண்ராஜ் முதல் நாள் பதவியை ராஜினாமா செய்கிறார். அடுத்த நாளே ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அப்போது இவர் யாருடைய ஆள். கிறிஸ்தவ சமுதாயத்தில் உள்ள ஒரு பிரிவினர் விஜயிடம் செல்கிறார்க்ள். இது ஆபத்தான அரசியலாகும்.
விஜய் செய்வது மாற்று அரசியல் கிடையாது. கொள்கை எதிரி, அரசியல் எதிரி என்று சொல்கிறார். பாஜவின் செல்வாக்கு தவெகவில் அதிகமாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். சிலருடைய வருகை. சிலருடைய ராஜினாமா கடிதங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுவது. விஜயின் அணுகுமுறை போன்றவை அதைதான் காட்டுகிறது. இஸ்லாமியர்களின் வாக்குகளை விட அதிகளவிலான கிறிஸ்தவர்களின் வாக்குகள் திமுகவுக்கு தான் செல்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் கூட போகலாம். விஜய் வருகிறபோது அது வெளியே போகும். விஜய் கட்சியில் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் சேர்வதற்கு காரணம்? அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்கள் என்று நினைக்கலாம். அல்லது வயதானவர்கள் தனது கட்சிக்கு வேண்டாம் என்று அவர் நினைக்கலாம். சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களால் மட்டும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியாது. அரசியல் அடித்தளம் என்பது முக்கியமானதாகும். தகவல் தொழில்நுட்பத்தின் அவசியத்தை மோடி முன்னதாக அடையாளம் கண்டுகொண்டார். காங்கிரஸ் கட்சி தாமதமாக தான் அதை தெரிந்துகொண்டது. விஜய் கட்சி, சமூக வலைதளங்களில் செயல்படுவதால் மட்டும் வளர்ந்துவிட முடியாது.
அருண்ராஜ், விகடன் இணைதளத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் உள்ள கருத்துக்களை பார்த்தால் அவர் மென்மையான வலதுசாரி சிந்தனை உடையவர் என்பது தெளிவாகிறது. 100 வேலை திட்டத்தால், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று அருண்ராஜ் சொல்கிறார். இது இங்கு சிறு முதலாளிகளும், குறு முதலாளிகளும் வைக்கக்கூடிய குற்றச்சாட்டு ஆகும். தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்காவிட்டால் அவர்கள் எப்படி வேலைக்கு வருவார்கள். விவசாய விளை பொருட்களை அதிக லாபம் வரும் இடத்தில் தானே விற்பனை செய்வார்கள். அந்த மார்க்கெட் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.300 வருகிறபோது, அதற்கு மேலாக நீங்கள் கொடுங்கள். அப்போது மற்றும் மார்க்கெட் நிலவரத்தை ஏற்க மறுப்பது ஏன்? அவர் ஒரு அதிகாரியாக இதை சொன்னால், அதை கடந்துசென்று விடலாம். ஆனால் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக ஆன அடுத்த நாளே இதுபோன்று பேட்டி கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் யார்? விஜயின் கருத்து இதுதானா? இது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
அருண்ராஜ் பாட்னாவில் இணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்தார். இன்றைக்கு பதவியை ராஜினாமா செய்கிறார். நாளைக்கே ஒப்புதல் அளிக்கிறார்கள். இதுபோன்று மத்திய அரசு என்றும் செயல்பட்டது கிடையாது. மருத்துவக் காரணங்களை தவிர்த்து வேறு எதற்காகவும் 6 மாதங்களுக்கு முன்பாக விஆர்எஸ் தரமாட்டார்கள். விஜய் கட்சியில் சேருகிற ஒரு ஐஆர்எஸ் அதிகாரிக்கு 24 மணி நேரத்தில் விஆர்எஸ் வழங்கி மோடி அரசு அனுப்புகிறது என்றால்? சாதாரண விஷயமா?. இதில் பாஜகவுக்கு பங்கு உள்ளது. சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு விஆர்எஸ் வழங்க வருடக்கணக்காக காலம் எடுத்துக்கொள்வார்கள். அண்ணாமலை பாஜகவில் சேர்வதால், உடனடியாக அனுமதி வழங்கினார்கள். இவற்றை எல்லாம் செய்கிறபோது நீங்கள் யார்? கூடுதலாக நீங்கள் எதை எல்லாம் பேசுகிறீர்கள். தவெகவில் சேர்ந்த உடன் மோடிக்கு பிடித்ததை எல்லாம் அருண்ராஜ் பேசுகிறார். அது விஜய்க்கு பிடிக்கிறதா? என்று விஜய்தான் சொல்ல வேண்டும். இது விஜய்க்கு தெரியாமல் நடந்திருந்தால் ஆபத்தானது. தெரிந்து நடந்திருந்தால் அதைவிட ஆபத்தானது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.