சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பாலா, மேடை வர்ணனையாளராகவும் ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் பொது மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார். மிக்ஜம் புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக களத்தில் இறங்கி ஒவ்வொருவருக்கும் தலா 1000 ரூபாய் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார். தன்னுடைய உழைப்பில் சேமிப்பாக வைத்திருந்த சுமார் 2 லட்சம் ரூபாயை இதற்காகச் செலவிட்டார். இவரைத் தொடர்ந்து பல பிரபலங்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ ஆரம்பித்தனர். அப்போது இவரிடம் இப்படி உதவி செய்து பப்ளிசிட்டி தேடி கொள்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாலா, பப்ளிசிட்டிக்காக இதைச் செய்யவில்லை. ஆனால், இது என்னைப் போன்ற பலருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு அருகே குக்கிராமத்தில் அசுத்தமான நீரினால் குடிநீரின்றி அவதிப்பட்ட மக்களுக்காக சிறிய அளவில் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார். இவ்வாறாக அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார் நடிகர் பாலா. அடுத்த கட்டமாக தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச ஆட்டோ சேவையையும் தொடங்கியுள்ளார். அதற்காக தன்னுடைய சொந்த செலவில் ஆட்டோ ஒன்றையும், அதற்காக ஓட்டுநர் ஒருவரையும் பணியமர்த்தியுள்ளார்.
சென்னை அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயது முதியோர் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் 24 மணி நேரமும் இந்த இலவச சேவையை தொடர்பு கொண்டு விரைவாக மருத்துவமனையை சென்றடையலாம். 9176878751 என்ற எண்ணை தொடர்பு கொண்டு இந்த இலவச சேவையைக் குறிப்பிட்ட பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வயதான ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல, பொதுப் போக்குவரத்தை எதிர்பார்த்து காத்திருந்தபோது அவருடைய கஷ்டத்தை அறிந்து கொண்ட பாலாவிற்கு இப்படி ஒரு உதவியை செய்தால் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியதால் இந்த இலவச ஆட்டோ திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் பாலா கூறியுள்ளார்.
- Advertisement -