மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஷாலின் 35 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘மகுடம்’. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம். மதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் விஷாலுடன் இணைந்து நடிக்கின்றனர். விஷால் இந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தை தற்போது விஷால் தான் இயக்கி வருகிறார் என பல தகவல்கள் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது படைப்பாற்றல் காரணமாக விஷால், ‘மகுடம்’ படத்தின் இயக்குனராகப் பொறுப்பேற்றுள்ளார் என்று சொல்லப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில காட்சிகளை மட்டும் தான் விஷால் இயக்குகிறார் என்றும் மற்றபடி ரவி அரசு தான் இந்த படத்தின் இயக்குனர் என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 20) தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷால் மகுடம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் விஷால் தான் ‘மகுடம்’ படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் என்றும் ரவி அரசு கதை எழுதியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் விஷால் இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
Wishing everyone a very Happy Diwali/Deepawali,
May this festival of lights as always bring joy, happiness, and prosperity to everyone.
On this special occasion, I wish to officially share the 2nd look of my current film Magudam/Makutam and also reveal a long pending stand… pic.twitter.com/5LygqZezCw
— Vishal (@VishalKOfficial) October 20, 2025
அந்த பதிவில், “படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்தில் எடுத்த முடிவை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்புகிறேன். அதாவது ‘மகுடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளேன். படைப்பாற்றல் மாற்றங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளேன். இது கட்டாயத்தின் காரணமாக எடுத்த முடிவு இல்லை. பொறுப்புணர்வின் காரணமாக எடுக்கப்பட்டது. சினிமா என்பது நம்மை நம்பும் ரசிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை. அதனைக் காப்பதற்காகவே இயக்குனரின் இருக்கையில் அமர்ந்துள்ளேன். சில நேரங்களில் சரியான முடிவை எடுப்பது என்பது நாம் பொறுப்பெடுத்து, சிலவற்றைத் திருத்தி, பெரிய இலக்கை நோக்கி செல்லும் வெற்றிகரமான வழியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.