பிரபல இயக்குனர் சுந்தர் சி, மேட்டுக்குடி அருணாச்சலம் அன்பே சிவம் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர். இவர் படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருபவர். அந்த வகையில் தலைநகரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சுந்தர் சி தீ, வீராப்பு ,சண்டை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்தும் வருகிறார். இவ்வாறு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் சுந்தர் சி அரண்மனை 1, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து இயக்கியுள்ளார்.
காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவான இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க யோகி பாபு, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அக்னி சினிமா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் சுந்தர் சி, குஷ்பூ ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அரண்மனையில் படமாக்கப்பட்டு வரும் அரண்மனை 4 திரைப்படம் 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 பொங்கல் தினத்தில் தனுஷின் கேப்டன் மில்லர், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் நாளில் கடும் போட்டி நிலவி வருவதால் சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2024 பொங்கல் தினத்தில் மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் அரண்மனை 4 படத்தின் வசூல் பாதிக்குமோ என்ற வகையிலும் படக் குழுவினர் அரண்மனை நான்காம் பாகத்தில் ரிலீஸை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு இன்றுவரை வெளியாகவில்லை. இனிமேல் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.