சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதாவது 2 வருடங்களுக்குப் பிறகு ரஜினியின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் தற்போது வரை அலைமோதுகிறது.
நெல்சன் திலிப் குமாரின் பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தால் நெல்சன் தனது பெயரை நிலை நாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனை சரியான முறையில் ஜெயிலர் படத்தின் மூலம் பயன்படுத்தி உள்ளார். தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் இப்படம் தற்போது வெளியான ஒரே வாரத்தில் 375.40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவிலேயே ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரலாற்றைப் படைத்துள்ளது. ஒரே வாரத்தில் இந்த அளவிலான வசூலை எந்த படமும் எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.