கங்குவா பட கூட்டணி, சூர்யா 47 படத்துக்காக மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இருப்பினும் சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர ‘வாடிவாசல்’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார். மேலும் சூர்யா, ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடிக்க உள்ளார் என சமீப காலமாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இதில் நடிகை நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் எதிர்பாராத தோல்வி படமாக அமைந்த நிலையில் அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக நடிகர் சூர்யா, அப்பொழுதே ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் நாட்களில் சூர்யா 47 படம் தொடர்பான மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.