இயக்குனர் துரை செந்தில்குமார், கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து காக்கி சட்டை திரைப்படத்தையும் தனுஷ் நடிப்பில் கொடி எனும் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். அடுத்ததாக சூரி நடிப்பில் இவர் இயக்கியிருந்த கருடன் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார், லெஜெண்ட் சரவணன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன், லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இந்த படம் உருவான விதம் நன்றாக இருந்தாலும் படமானது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே வேறொரு லுக்கில் களமிறங்கியுள்ளார் லெஜெண்ட் சரவணன். அதன்படி துரை செந்தில்குமார் இயக்கி வரும் புதிய படத்தில் லெஜெண்ட் சரவணன் புதிய பரிமாணத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது திரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் தூத்துக்குடியில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.