மாமன் படத்திற்கு கிடைத்த வெற்றிக்காக நடிகர் சூரி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூரி தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த மே 16ஆம் தேதி சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியானது. சூரியுடன் இணைந்து ராஜ் கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா, பாபா பாஸ்கர், பால சரவணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். இந்த படமானது தாய் மாமனுக்கும், ஆறு வயது சிறுவனுக்குமான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சூரி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் உண்மையான வெற்றி என்றால், உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மனதார மதிப்பு கொடுப்பதில் தான் தொடங்குகிறது. அந்த நம்பிக்கையுடன் மாமன் கதையை நான் தொடங்கினேன். மாமன் என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களை தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஒரு உணர்வுபூர்வமான பயணம். இந்த உணர்வுகளை என் இயக்குனர் மிக நுட்பமாக உணர்ந்து, ஆழ்ந்த அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்போடும் எடுத்துக்கொண்டு, அதை உயிரோட்டம் உள்ள திரைப்படமாக மாற்றியதற்கு என் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களை மனதார உணர்ந்து உயிரோட்டத்துடன் அரங்கேற்றினார்கள்.
உண்மையான வெற்றி என்றால்… உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மனதார மதிப்புக் கொடுப்பதில் தான் ஆரம்பமாகிறது. அந்த நம்பிக்கையோட மாமன் கதையை நான் தொடங்கினேன்.🙏
மாமன் என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும்… pic.twitter.com/SZQYKQFkcJ
— Actor Soori (@sooriofficial) May 26, 2025

அதேபோல், ஒளிப்பதிவு, இசை, தொகுப்பு, ஒலி, கலைத்துறை, உடை வடிவமைப்பு, நடனம், சண்டை இயக்கம், எழுத்து, தயாரிப்பு நிர்வாகம், வாகன வசதி, ஒவ்வொரு தொழில்நுட்பக் குழுவும் தங்களின் முழு அர்ப்பணிப்போடும் நம்பிக்கையோடும் பணியாற்றினர். அவர்களது அயராத உழைப்பும், நேர்த்தியும் தான் மாமன் என்று உங்கள் இதயங்களில் இடம் பெற்றிருக்க முக்கிய காரணம். இன்று மாமன் திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒலிக்கிறது திரையில் மட்டுமல்ல, நீங்கள் அளித்த அன்பிலும், பாராட்டிலும், உற்சாக புன்னகையிலும், ஒவ்வொரு குடும்பத்தின் உள்ளத்திலும் அது வாழ்கிறது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் எனக்கு உண்மையான வெற்றியும் மகிழ்ச்சியும். மாமன் படத்தை உங்கள் குடும்பத்தோடு இணைந்து ரசித்து உள்ளதோடு ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியும் என் வாழ்த்துக்களும்” என்று குறிப்பிட்டுள்ளார்.