பாய்மரப் படகு பந்தயத்திற்குத் தமிழக அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் – இயக்குநர் மதிமாறன் புகழேந்தி கோரிக்கை
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் வெற்றிமாறன், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் படக்குழுவினரான சத்யராஜ், ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் & பேச்சுக்கள்:
எனக்குக் கிடைக்கும் கைத்தட்டல்கள் வெற்றிமாறன் சாருக்கே சேரும் – நடிகர் சூரி:
விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூரி, “இன்று எனக்குக் கிடைக்கும் விசிலும் கைத்தட்டலும் வெற்றிமாறன் சாருக்கே சேரும். நான் இந்த அளவிற்கு வந்ததற்கும், இனிமேல் உயருவதற்கும் அவரே காரணம். அவர் விதைத்த விதை நான் என்றார்.
மேலும், தனது தாயாரை மேடைக்கு அழைத்து வந்து கௌரவித்தார். அப்போது சூரியின் தாயார், சூரி சினிமாவில் கடந்து வந்த கடுமையான வறுமை நிலைகளையும், உணவின்றித் தண்ணீர் குடித்துப் படுத்த நாட்களையும் நினைவுகூர்ந்து கண்ணீர் மல்கப் பேசியது அரங்கத்திலிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.
பாய்மரப் படகு பந்தயத்திற்கு அங்கீகாரம் கோரிக்கை – இயக்குநர் மதிமாறன் புகழேந்தி:
“‘ஆடுகளம்’ படத்தில் பணியாற்றவில்லை என்றால் ‘மண்டாடி’ உருவாகியிருக்காது. இந்தப் படம் குற்ற உணர்ச்சியையும், வாழ்க்கையில் தோற்றுப்போன ஒருவருக்குக் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பையும் பற்றிப் பேசுகிறது,” எனக் குறிப்பிட்ட இயக்குநர், ‘பாய்மரப் படகு பந்தயம்’ என்ற விளையாட்டுக்குத் தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என மேடையில் கோரிக்கை விடுத்தார்.
ரூ.1,000 கோடி வசூல் செய்யும் – நடிகர் சத்யராஜ்:
சூரி மிகக் கடுமையான உழைப்பாளி. அவர் சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுப்பதைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். கடலுக்குள் படப்பிடிப்பு நடத்துவது எளிய காரியமல்ல. இந்தப் படத்தை சீனாவில் வெளியிட்டால் நிச்சயமாக ரூ.1,000 கோடி வசூல் செய்யும்,” எனப் பாராட்டினார்.
சூரிக்காகக் கவிதை வாசித்த பா. விஜய்:
பாடலாசிரியர் பா. விஜய், நடிகர் சூரியின் திரைப் பயணத்தையும் உழைப்பையும் போற்றி மேடையில் கவிதை ஒன்றை வாசித்தார். அதைக் கேட்டு நடிகர் சூரி கண்கலங்கினார்.
ஆர்.ஜே. பாலாஜி & இயக்குநர் வெற்றிமாறன் வாழ்த்து:
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பேசுகையில், “1999-ல் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாகத் தன் பயணத்தைத் தொடங்கி, 25 ஆண்டுகள் உழைத்து இன்று கதாநாயகனாக உயர்ந்திருக்கும் சூரி, சினிமா பின்னணி இல்லாத அனைவருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்,” என்றார். இயக்குநர் வெற்றிமாறன், சூரியின் மனஉறுதியைப் பாராட்டியதோடு, சண்டைக் காட்சிகளில் உடலுக்கு ஏற்படும் காயங்களில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், ‘மண்டாடி‘ திரைப்படம் தனது விருப்பத்திற்குரிய படங்களின் வரிசையில் இருக்கும் என்றும், மிகப்பெரிய வெற்றிய அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதையில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகத் தகவல்!
