இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகிறார்கள்.
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர்கள் தான் விவேக் – மெர்வின். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் வெளியான டோரா, தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ், கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் ஆகிய படங்களில் விவேக் – மெர்வின் ஆகிய இருவரும் இசையமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். இவர்கள் தற்போது இயக்குனர் மகேஷ்பாபு இயக்கும் ராம் பொத்தினேனியின் 22 ஆவது படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்கள். தற்காலிகமாக RAPO 22 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படமானது விவேக் – மெர்வின் ஆகிய இருவரின் இசை பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விவேக் – மெர்வின் பேசியதாவது, “உயர்தரமான இசை மற்றும் புதுமையான கதையை தருவதில் தெலுங்கு சினிமா பெயர் பெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராம் பொத்தினேனி நடிக்கும் ’RAPO 22’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நாங்கள் அறிமுகமாவது எங்களுக்கு பெருமையான விஷயம். இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல். நிச்சயம் எனர்ஜிடிக்கான இசையைக் கொடுப்போம்” என்றனர். மேலும் விவேக் மற்றும் மெர்வின் இருவரின் தெலுங்கு அறிமுகத்தை இப்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். அடுத்தது ’RAPO 22’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.