பராசக்தி தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது என நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் தான் பராசக்தி. இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். இந்த படம் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கும் பராசக்தி என்ற தலைப்பு பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் இறுதியாக பரஸ்பர முடிவு எட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது சிவாஜி கணேசனின் பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பராசக்தி தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா திரு. பெருமாள் முதலியார் அவர்கள்தான் தயாரித்தார். ஏவிஎம் நிறுவனம் இந்த படத்தை சில ஏரியாக்களில் விநியோக உரிமையை மட்டுமே கைப்பற்றி இருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற கலைஞர் அவர்களின் கனல் தெறிக்கும் வசனங்களும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.
மேலும் விரைவில் 75வது ஆண்டு (வெள்ளி விழா) காண இருக்கும் வேளையில் பராசக்தி படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் திட்டமிடப்பட்ட அதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். எனவே எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி படத்தின் பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. வேறு யாரும் தங்களுடைய திரைப்பட தலைப்பாக பராசக்தி பட தலைப்பை பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தற்போது பராசக்தி தலைப்பு பஞ்சாயத்து பெரும் பேசு பொருளாகி இருக்கிறது.