Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி தன் மகளின் பெயரில் செய்யப் போகும் நற்காரியங்களில் தோள் கொடுப்போம்..... பார்த்திபன்!

விஜய் ஆண்டனி தன் மகளின் பெயரில் செய்யப் போகும் நற்காரியங்களில் தோள் கொடுப்போம்….. பார்த்திபன்!

-

விஜய் ஆண்டனியின் மகள் மறைவிற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்பாக பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 16 வயதுடைய மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவல் திரையுலகை பிரபலங்கள் பலரையும் அத்துயரத்தில் இருந்து மீளமுடியாமல் வைத்துள்ளது. விஜய் ஆண்டனிக்கு யுவன் சங்கர் ராஜா, விஷால், சிம்பு, அனிருத் உள்பட பலரும் தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று விஜய் ஆண்டனி ஒரு அறிக்கையின் மூலம் தன்மகள் மீராவுடன் நானும் இறந்து விட்டேன் என்றும் அவளின் பெயரில் சில நல்ல காரியங்களை செய்ய உள்ளேன் என்றும் தெரிவித்திருந்தார். விஜய் ஆண்டனியின் இந்த உருக்கமான பதிவு பலரின் மனதை உலுக்கியுள்ளது.

அந்த வகையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஈவு இரக்கமற்ற ஒரு கயிறு அவர் ஈன்ற உயிரை பறித்து விட்டதோ இல்லையோ-அவர் கடிதம் என் உயிரை உலுக்கிவிட்டது.குறிப்பாக “என் மகளுடன் நானும் இறந்துவிட்டேன்”என்ற அந்த ஒற்றை வரி … அவரின் சோகத்தை என்னுள் கடத்தி விட்டது. இப்படி அவர் தன்னை தானே பக்குவமாக தத்துவமாக சமாதானப் படுத்திக் கொண்டாளே தவிர,தேவனே நேரில் வந்து ஆறுதல் சொன்னாலும் தீராதிந்த சோகம். பூவொன்றினையே பூமிக்குள் புதைத்துவிட்டு அக்கல்லறை மீது மீண்டும் பூக்களையே தூவுகையில் என் இதயமும் தூள் தூளாகி அந்த பூக்களுக்கிடையே சிக்கிக் கொண்டது. யாரோ நான்… என் மனமே இன்னும் அம்மயானத்தோடு மயானமாய் உறைந்து கிடக்கையில், பெற்றவர்களின் மனம்? விஜய் ஆண்டனி தன் மகளின் பெயரில் செய்யப்போகும் நற்காரியங்களில் தோள் கொடுப்போம். வேறென்னச் சொல்லி நம்மை நாம் சமாதானப்படுத்திக் கொள்வது?” என்று பதிவிட்டு விஜய் ஆண்டனிக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

MUST READ