பாகுபலி 1, பாகுபலி 2 படங்களின் மாபெரும் வெற்றியால் பான் இந்திய ஸ்டாராக உருவெடுத்த பிரபாஸ் அதன் பின்னர் தொடர்ச்சியாக தோல்விப் படங்களைக் கொடுத்து வந்தார். விமர்சன ரீதியிலும் அனைத்து படங்களும் எதிர்மறையாகவே அமைந்தன. நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பிரபாஸ், கன்னட இயக்குனர் பிரசாந்த் நீலுடன் கைகோர்த்தார். கே. ஜி. எஃப் படங்களின் வெற்றியால் இந்திய அளவில் டாப் இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இந்தக் கூட்டணியில் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது “சலார்-Part1 cease fire“
படத்தின் ட்ரைலரில் காட்டப்பட்டது போலவே கான்சார் எனப்படும் ஒரு கற்பனையான நகரம். அங்கு இரு நண்பர்களாக பிரபாஸ் (தேவா) மற்றும் பிரித்விராஜ் (வரதராஜ மன்னார்). அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனையால் பிரபாஸ் தன் தாயான ஈஸ்வரி ராவுடன் அங்கிருந்து வெளியேறி அசாமில்,கடந்த கால வாழ்க்கையை மறைத்து வாழ்ந்து வருகிறார். 25 வருடங்களுக்கு பின்னர், ஊருக்கு புதிதாக வந்து சேரும் ஸ்ருதிஹாசனை ஒரு ரவுடி கும்பல் தேடி வருகிறது. அந்த கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார் பிரபாஸ். பின்னர் தான் இது எல்லாமே தன்னுடைய பழைய நண்பன் பிரித்திவிராஜின் திட்டம் என்பதை தெரிந்து கொள்கிறார் பிரபாஸ். பின்னர் பிரித்திவிராஜுக்கும் பிரபாஸுக்கும் என்ன நடந்தது, ஆத்யா (ஸ்ருதிஹாசன்) யார்?, நெருங்கிய நண்பர்கள் எதிரிகளாக மாறக் காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபாஸுக்கு ஒரு தரமான கம்பேக் ஆக்சன் படமாக அமைந்துள்ளது சலார். வன்முறை கலந்து ஆக்சன் காட்சிகளில் நிஜ டைனோசராகவே மாறி மனுஷன் மிரட்டியிருக்கிறார். நச்சுன்னு நான்கு சண்டைக் காட்சிகள். திரையரங்கமே அதிர்கிறது. ரவி பஷூரின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளை மேலும் பிரம்மாண்டமாகக் காட்டுகிறது. ஒரு சில இடங்களில் கேஜிஎப் பட பின்னணி இசையையும் நினைவுபடுத்துகிறது. படத்தில் பிரபாஸுக்கு வசனங்கள் பேசும் படியான காட்சிகள் சற்று குறைவு ஆனால் அதனை ஆக்சன் காட்சிகளால் நிறைவு செய்துள்ளார். பரபரப்பாகச் செல்லும் முதல் பாதியில் இடையிடையே சென்டிமென்ட் காட்சிகள்,பல மாஸ் காட்சிகள், அதிரடியான இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சிகளில் விசில் பறக்கிறது.
பர்ஃபெக்ட்டான முதல் பாதியை தொடர்ந்து வரும் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் அழுத்தமற்று இருக்கின்றன. படத்திற்கான கிரே ஷேடை (Grey Shade) மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பவன் கவுடா. உஜ்வல் குல்கர்ணியின் படத்தொகுப்பு முதல் பாதியில் சிறப்பாக இருந்தாலும் இரண்டாம் பகுதியில் சில காட்சிகளை ட்ரிம் செய்திருக்கலாம் என தோன்றியது. ரெண்டு மணி நேரம் 56 நிமிடங்கள் படம் ஓடுகிறது.அன்பறிவு மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் இல் “சலார் 2- ஷெளர்யாகன பர்வம்” படத்திற்கு லீடு கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது.படத்தின் இரண்டாம் பாதியில் சில குழப்பங்கள், கே.ஜி. எஃப் பட அளவுக்கு சென்டிமென்ட் காட்சிகள் எடுபடாமல் போனது என சில குறைகளைத் தவிர “சலார்” திரையரங்குகளில் பார்த்து ரசிக்கக்கூடிய ஆக்சன் படமாகவே அமைந்துள்ளது.