நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கடின உழைப்பினாலும் திறமையினாலும் வெள்ளித்திரையில் நுழைந்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது SK23 எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. அதேசமயம் நேற்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட கோட் திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில் நடிகர் விஜயிடம் சிவகார்த்திகேயன், “நீங்க முக்கியமான வேலையா போறீங்க. அத நீங்க பாத்துக்கோங்க. நான் இதை பாத்துக்குறேன்” என்று சொல்வது போன்ற வசனம் இடம் பெற்றிருக்கும். இதனை ரசிகர்கள் பலரும் விஜய் அரசியலுக்கு செல்வதால் சினிமாவை சிவகார்த்திகேயன் பார்த்துக் கொள்வதாக கூறியிருக்கிறார் என்பது போன்று சிலாகித்து வருகின்றனர். இது தொடர்பாக சிவகார்த்திகேயனும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே சிவகார்த்திகேயன், அதே மகிழ்ச்சியுடன் தான் நடித்திருக்கும் அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை இன்று தொடங்கியுள்ளாராம்.
அதன்படி ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இன்று (செப்டம்பர் 6) அமரன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாம். தொடர்ந்து நான்கு நாட்கள் சிவகார்த்திகேயன் டப்பிங் பேச இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாக இருக்கும் அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். ராணுவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.