நடிகர் வடிவேலு முதன்முறையாக கார்த்தியுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து வெளியான கங்குவா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் கார்த்தி. மேலும் இவர், வா வாத்தியார், சர்தார் 2 ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தனது 29ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதன்படி கார்த்தி 29 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், கார்த்தி 29 படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் வடிவேலு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கும் நிலையில் தற்போது கார்த்தியுடன் நடிக்க உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.