பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விஜயகாந்தின் உடல் அவர் நேசித்த தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தன்னலம் கருதாத பொதுநலவாதியாக வாழ்ந்து மறைந்த விஜயகாந்த், சினிமாவில் மட்டுமல்லாமல் பொது வாழ்க்கையிலும் பலருக்கும் உதவி செய்திருக்கிறார். அந்த வகையில் சினிமா, அரசியலை தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த்.
அதேசமயம் தென்னிந்திய நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்டெடுத்தவர். அதனால் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் விஜயகாந்த்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நினிவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜயகாந்தின் பெருமையையும் புகழையும் பேசி விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர்களை தூவி, திரை பிரபலங்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையில் தேமுதிக நிர்வாகத்தின் சார்பில், ஜனவரி 24ஆம் தேதி அன்று விஜயகாந்தின் பட திறப்பு விழா நடைபெறும் என்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்ட அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், விஜயகாந்தின் உருவ படத்தை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.