உங்களுடன் சமமாக நடிக்க ஆசை… சத்யராஜை நெகிழவைத்த விஜய் சேதுபதி…
- Advertisement -
குணச்சித்திர வேடத்தில் இல்லாமல், இரண்டு ஹீரோ கதைக்களத்தில் சத்யராஜூக்கு சரிசமமாக நடிக்க வேண்டும் என நடிகர் விஜய்சேதுபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்தி இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவர் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், ஒரு காலக்கட்டத்தில் அவர் பல படங்களில் நடித்தாலும் அவரது முகம் கூட பலருக்கு தெரியவில்லை. இன்று தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவின் நடிகர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது தமிழில் ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வௌியானது. ஸ்ரீராம் ராகவன் இத்திரிரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்தில் கத்ரினா கைஃப் நாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் சலூன் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, சத்யராஜிடம், உங்களுடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும். குணச்சித்திர வேடத்தில் இல்லை, இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நீங்கள் மிகச்சிறந்த நடிகர், நான் உங்களை ரசித்திருக்கிறேன் என விருப்பம் தெரிவித்தார். மேலும், சத்யராஜ் நடித்த தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை ஆகிய படங்களை தற்போது வரை அடிக்கடி பார்த்து ரசிப்பேன் என தெரிவித்துள்ளார்.