நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் திரைப்படத்தில் நடித்திருந்தார் விஷால். இந்த படம் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. அதன் பின்னர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை தானே இயக்கி நடிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் இந்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே விஷால் அடுத்தது என்ன படம் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி விஷாலின் அடுத்த படத்தை இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி இயக்கப் போகிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இது தொடர்பான முதற்கட்டை பேச்சு வார்த்தை நடைபெற்ற முடிந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
விஷால் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இணைந்து பாயும் புலி, ரத்னம் போன்ற பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஏற்கனவே விஷால் நடிக்க போவதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தகவல் வெளியானது. அதாவது எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் எழுதிய சிவம் என்ற ஆன்மீக கதையில் விஷால் ஹீரோவாக நடிப்பதாகவும் அந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இது அந்த படமாக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.