பீகார் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மற்றும் இயங்கி வரும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை அரசு-தனியார் பங்களிப்பு (PPP – Public-Private Partnership) முறையில் இயக்குவதற்கு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார்மயமாக்கப்படும் மருத்துவக் கல்லூரிகள்
பீகார் மாநிலத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் என்ற பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள மற்றும் தற்சமயம் கட்டுமானப் பணிகளில் இருக்கும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனைச் சார்ந்த மருத்துவமனைகளின் நிர்வாகப் பொறுப்புகள் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

PWC நிறுவனத்திற்கு ரூ.8.27 கோடி நிதி ஒதுக்கீடு
இந்தத் திட்டத்தை முறைப்படியும் விரைவாகவும் செயல்படுத்துவதற்காக ‘டிரான்சாக்ஷன் அட்வைசர்’ (Transaction Adviser) ஆக சர்வதேச ஆலோசனை நிறுவனமான ‘பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூபர்ஸ்’ (PwC – PricewaterhouseCoopers) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் நிறுவனத்தின் சேவைகளுக்காகவும், திட்ட வரைவு தயாரிப்பதற்காகவும் ரூ.8.27 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யவும் பீகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கவலை
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தனியார்மயமாக்கப்படும் இந்த நடவடிக்கை, ஏழை மற்றும் எளிய மக்களின் இலவச மருத்துவச் சிகிச்சையைப் பாதிக்கும் என சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சிகளும் கவலை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், PPP முறையின் மூலம் நவீன மருத்துவ வசதிகளும் உயர்தர சிகிச்சையும் மக்களுக்கு விரைவாகக் கிடைக்கும் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் புதிய விதிமுறை: அவதூறு பதிவுகளை நீக்க 2 மணி நேரம் மட்டுமே கெடு!
