குஜராத்தில் நடைபெற உள்ள சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலை சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா இடையேயான தொடர்பை எடுத்துக் கூறும் வகையில் வரும் 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது , நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் நமது பிரதமர் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது.
காசியில் 40 ஆயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழகத்தில் சில ஆயிரம் சவுராஷ்டிரா மக்கள் வாழ்கிறார்கள். நாம் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளும் காலம் இது. அதற்காகதான் காசி, சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் தொடங்கப்பட்டது. நாம் அதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
சவுராஷ்டிராவுக்கும், தமிழகத்துக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறவுகள் உள்ளது. சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நீண்ட மற்றும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர். இது பற்றி பல கதைகளும் கல்வெட்டுகளும் எழுதப்பட்டுள்ளன. இந்தப் பயணத்திற்காக நிறைய மாணவர்கள், இளைஞர்கள் தன்னார்வலர்கள் ஆவலாக உள்ளதை தற்போது பார்த்தேன். சில அதில் முதல்முறை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அது மகிழ்ச்சியாக உள்ளது. இந்நிகழ்ச்சி இந்த மாதம் இறுதி வரை தொடரும்.
தமிழ்நாட்டில் உள்ள சவுராஷ்டிரா மக்கள் தங்கள் வேர்களைத் தேடி செல்ல வேண்டும். இது ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கும். பாரதம் என்றால் என்ன? பாரதம் எப்படி சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரே குடும்பமாக இருந்தது என்பதனை இவை தெரிவிக்கும் எனக் கூறினார்.