வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற அனைத்து கட்சி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் உள்நாட்டு கலவரத்தினால் அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கதேசம் – இந்திய எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ள சூழலில் நேற்று இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் சேக் ஹசீனாவை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசி இருந்தார்.
அஜித் தோவல் சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு இந்திய எல்லைப் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் விமான படையினர் தயாராக இருக்கவும் பாதுகாப்பு துறைக்கு உரிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய அரசு அவசர அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து நடக்கும் இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் இக்கூட்டத்தில் வங்கதேச நிலவரங்கள் குறித்து எடுத்துரைப்பதோடு இந்திய வங்கதேச எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தினர் குறித்த நிலவரம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.