
நடந்து முடிந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.களைத் தனித்தனியாக அழைத்துப் பேசிய கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள், அவர்களிடம் எழுத்துப்பூர்வமான கடிதத்தைப் பெற்று, டெல்லியில் உள்ள கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், டெல்லியில் சித்தராமையா முகாமிட்டுள்ளார். அங்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் ஆலோசனை செய்து வருகின்றார்.
தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், கட்சி மேலிடம் விடுத்த அழைப்பின் பேரில், டி.கே.சிவக்குமார் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்?- தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்!
முன்னதாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், “யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை. 135 எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.