
கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களின் ஆதரவு தமக்கே இருப்பதாக ஆணித்தனமாக தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா.
கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!
மறுபுறம் கட்சி மேலிடத்தைச் சந்திக்க டெல்லி செல்கிறார் டி.கே.சிவக்குமார். இப்படி இருவரும் மாறி மாறி போட்டியிடுவதால், அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார் என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் கேட்கப்பட்ட, கருத்துகள் அடங்கிய எழுத்துப் பூர்வமான அறிக்கையைத் தேர்தல் மேற்பார்வையாளர்கள் குழு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கியிருக்கிறது.
எனினும், ஒட்டுமொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் தமக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா. மறுபுறமும், தேர்தலில் தனிநபராக உழைத்து, 135 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று தந்தது தானே என கையை உயர்த்துகிறார் டி.கே.சிவக்குமார்.
“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்
இதனால் கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சமரசம் ஏற்படுத்த இருவரையும் டெல்லிக்கு வருமாறு கட்சி மேலிடம் அழைக்க, ஒரு முடிவை எடுப்பதற்காக டெல்லி விரைந்திருக்கிறார் சித்தராமையா.
ஆனால், டி.கே.சிவக்குமாரோ வயிற்று வலி என காரணம் காட்டி, தமது டெல்லி பயணத்தை நேற்று (மே 15) ரத்து செய்தார். இதனால் கர்நாடக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனை நடைபெற்றது.
இதில் கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்துள்ளனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து விவாதிக்கவுள்ளார் மல்லிகார்ஜூன கார்கே.
அதேநேரம், டி.கே.சிவகுமாருக்கு பதிலாக டெல்லி சென்றுள்ள அவரது சகோதரர் டி.கே.சுரேஷ், கட்சியின் தலைவர் கார்கேவைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி வருகிறார்” என்றார்.
கர்நாடக முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் சூழலில், மல்லிகார்ஜுன கார்கேவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, 6.5 கோடி கன்னடர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கட்சி மேலிடம் முடிவெடுக்கும் எனக் கூறி, தற்போதைய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
எனினும், காலதாமத்தைத் தவிர்க்கும் வகையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் என்பதை கட்சி மேலிடம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.