என் சவ உடல் கூட பாஜக அலுவலகம் போகாது. கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா பேச்சு.
நான் இறந்த பிறகு என் உடல் கூட பாஜக அலுவலகம் செல்லாது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சீத்தராமைய்யா கடுமையாக பேசியுள்ளார்.

அதேபோல் சித்தராமையா இறந்தால் அவர் உடலை நாய் கூட முகர்ந்து பார்க்காது என்று அம்மாநில பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டியளித்து கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் சூட்டை கிளப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் குரல் என்ற பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சார கூட்டம் ராம்நகர் மாவட்டத்தில் நடைபெற்ற போது பொதுகூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் சித்தராமையா தனக்கு ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவி வழங்கினாலும் சரி நான் இறந்த பிறகு என் பிரேத உடல் கூட பாஜக அலுவலகமோ அல்லது ஆர் எஸ் எஸ் அலுவலகமோ செல்லாது என்று கூறினார்.
இதற்கு பதிலடியாக இன்று சிவமோகா நகரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, சித்தராமையா இறந்தால் அவரது உடலை நாய் கூட முகர்ந்து பார்க்காது என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தேர்தல் களத்தில் தலைவர்கள் இடையே வார்த்தை போர் உச்சத்தை அடைந்துள்ளது.
