ஜூன் 21, 2026 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET-UG) மறுதேர்வுக்காக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, அவரது விருப்பத்திற்கு மாறாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் மறுதேர்வு எழுதும் மராட்டிய மாணவர் அப்துல்லா முஹம்மது தாலிப் என்ற மாணவர், நாக்பூர், வார்தா மற்றும் பண்டாரா உள்ளிட்ட உள்ளூர் மையங்களைத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அவருக்கான ஹால் டிக்கெட்டில் அபுதாபியில் அமைந்துள்ள “Abu Dhabi Indian School” தேர்வு மையமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளூர் மையத்திற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெளிநாட்டு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், மாணவரிடம் பாஸ்போர்ட் இல்லாததாலும், சர்வதேச பயணத்திற்கு தேவையான கால அவகாசம் இல்லாததாலும் தேர்வில் பங்கேற்பது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மாணவரின் தந்தை தேசிய தேர்வு முகமைக்கு (NTA) புகார் அளித்தார். புகாரை பரிசீலித்த அதிகாரிகள், இது தொழில்நுட்பக் குளறுபடியால் ஏற்பட்ட தவறு என ஒப்புக்கொண்டனர். மேலும், மாணவருக்கு புதிய தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டை இன்று மாலை 4 மணிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவம், தேசிய அளவிலான தேர்வுகளில் தொழில்நுட்ப பிழைகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் சிரமங்கள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?
