வந்தே பாரத் ரயில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது என்றும் வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் ஆண்டுக்கு, 500 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? வந்தே பாரத் ரயில்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? அதேபோல் வந்தே பாரத் ரயில்களில் அமரும் வகையிலான இருக்கை மட்டுமே உள்ள நிலையில் படுக்கை வசதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படுமா? என எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இப்போது வரை 502 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரத்தில் தேவைக்கேற்ப கூடுதல் பெட்டிகளை தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கும் என்றும் வந்தே பாரத் ரயில்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் தேவையான இடத்தை கண்டறியும் பொறுப்பானது RITES-யிடம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இருக்கை வசதிகளை மட்டுமே கொண்ட வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதிகளையும் செய்யக்கூடிய திட்டமிடல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பணிகள் முடிவடைந்தவுடன் விரைவில் இவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வமாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.