ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் கொடுக்க குவிந்த இளைஞர்கள்
ரயில் விபத்தில் காயமடைந்து ஒடிசா பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரத்த தானம் கொடுக்க குவிந்த இளைஞர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும், நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையில், மனிதநேயத்தை எடுத்துக்காட்டும் சில சிறப்புப் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் காயமடைந்தவர்களுக்கு இரத்த தானம் செய்ய நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். இது தவிர, உள்ளூர் மக்களும் குழுக்களுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றனர். சுகாதாரத் துறையினர் இரத்த தானம் செய்வதற்கான முகாம் ஒன்றை அமைத்துள்ளனர், அங்கு மக்கள் இரத்த தானம் செய்கிறார்கள். இந்த மீட்பு பணியில் அப்பகுதி மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல பணிகளில் உதவி வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க திடீரென ரத்தத்தின் தேவை அதிகரித்து பல யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. உடனே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள் தாங்களாகவே மருத்துவமனைகளுக்கு வந்து ரத்த தானம் செய்து வருகின்றனர்.
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்து , ரத்தம் தேவை படுவோருக்கு ரத்ததானம் வழங்கி பெருந்துயரான காலத்தில் பேருதவி செய்து மனிதாபிமானத்திற்கு உயிரூட்டியிருக்கும் ஒடிசா மக்களின் செயல் மெய்சிலிர்க்கச்செய்கிறது! காலத்தார் செய்த… pic.twitter.com/FSsR7pxh31
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 3, 2023
இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், அதனை டிவிட்டரில் பகிர்ந்துள்ள வானதி சீனிவாசன், “ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்து , ரத்தம் தேவை படுவோருக்கு ரத்ததானம் வழங்கி பெருந்துயரான காலத்தில் பேருதவி செய்து மனிதாபிமானத்திற்கு உயிரூட்டியிருக்கும் ஒடிசா மக்களின் செயல் மெய்சிலிர்க்கச்செய்கிறது! காலத்தார் செய்த நல்லுதவிக்கு, தலை வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.