திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அதில் உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக பெறுப்பேற்று இருந்தார். அப்போது பல்வேறு தரப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரிடம் விடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தன் மீது தொடர்ந்து விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். அதை பொருட்படுத்தாமல் செயல்படுவேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட தான் செய்வார்கள் எனவும் அவர் கூறினார்.

கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தும் போது அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன்,வெள்ளகோவில் சாமிநாதன், மூர்த்தி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.