அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தாா்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.), அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க.), நாம் தமிழர் கட்சி (நா.த.க.) மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ள நிலையில், இந்த முறை நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவாதங்களில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த அரசியல் சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எந்த அணியில் இணைவார் என்ற கேள்வி அதிக கவனம் பெற்றிருந்தது. சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் அரசின் செயல்பாடுகளை பாராட்டிய அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் இன்று மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அப்போது முதல்வர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்தனர். முன்னதாக அமைச்சர் சேகர்பாபுவுடன் அவர் ஒரே காரில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் அவர் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருடன் ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவி விலகத் தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெ. ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினைகளின் பின்னணியில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் துணை முதலமைச்சராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டிருந்தார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க.வை மீட்கும் நோக்கில் சட்டரீதியான போராட்டம் மேற்கொண்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். ‘அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம்’ என்ற பெயரில் தனி அமைப்பையும் நடத்தி வந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி தெளிவுபடுத்தியிருந்தார். இதற்கிடையில் டி.டி.வி. தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததும் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களில் சிலரும் தி.மு.க.வில் ஐக்கியமாகினர்.
இவ்வாறான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.


