விஜயின் தவெக இரண்டாவது ஆண்டு விழாவிற்கு 2500 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை எனவும் அவர்களுக்கு காலை உணவு சரியான முறையில் வழங்கப்படவில்லை என தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. 2ம் ஆண்டு தொடக்கத்தின் முதல் அதிரடியாக Get out என்ற கையெழுத்து இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தனது முதல் கையெழுத்துடன் தொடங்கி வைத்தார். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் கூறுகையில்,” தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நம்முடைய வெற்றித் தலைவர் தன்னுடைய போர்க்கரங்களால் திரைக்கு மறைவில் கபட நாடகம் ஆடக்கூடியவர்களை விரட்டி அடிக்க, ஒருவர் பாட்டுப்பாட மற்றொருவர் அதற்கேற்ப நடனமாடிக் கொண்டிருக்கக்கூடிய கபடதாரிகள் அனைவரையும் இருவரையும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறு கெட் அவுட் என்று சொல்லி பொற்கரங்களால் முதல் கையெழுத்து போடுகிறார்.
நம்முடைய தலைவரை தொடர்ந்து தலைமை கழக நிர்வாகிகள் ஹஷ்டேக் கெட் வுட் என்று அந்த பதாகையில் சிறப்பு கையெழுத்தை பதிவு செய்கிறார்கள். இனி வீட்டிலும் நாட்டிலும் உங்களுக்கு வேலை இல்லை கெட் அவுட் என்று உறக்கச் சொல்வோம்” எனக்கூறினார். இதனைத் தொடர்ந்து அந்த பதாகையில், விஜய் கையெழுத்துப்போட்டார். அப்போது அருகில் நின்று இருந்த தேர்தல் வியூ க அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோரையும் கையெழுத்துப்போடுமாறு அழைத்தார் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். பலமுறை வற்புறுத்தியும் பிரசாந்த் கிஷோர் கையெழுத்துப்போட மறுத்துவிட்டார்.
இதனை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த விஜய் கொஞ்சம் மனம் வருந்திப்போனது வீடியோகாட்சிகளில் பதிவாகி உள்ளது.