இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாததால் இந்திய அணியானது வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பெரியளவில் ஜொலிக்காததால் 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 150 ரன்களைச் சேர்த்தது. இதில் நிதிஷ்குமார் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பந்த் 37 ரன்களையும் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்று நடந்த முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களைச் சேர்த்திருந்தது. இதன் மூலம் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியாவைவிட 83 ரன்கள் ஆஸ்திரேலிய அணி பின்தங்கி இருந்தது.
இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி மேலும் 37 ரன்கள் சேர்த்து 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பெர்த் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலையில் இந்தியா அணி உள்ளது. முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.