பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடங்கியுள்ள யூடியூப் சேனல் 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சப்ஸ்க்ரைப் செய்து சாதனை படைத்துள்ளது.
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளவர் ஆவார். ஸ்பெயின் நாட்டின் ரியல் மேட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி அவர், ஐரோப்பாவில் உள்ள சாம்பியன் கோப்பைகளையும் வசப்படுத்தி அசத்தினார். தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கடந்த 21ஆம் தேதியன்று புதிய யூடியூப் சேனலை தொடங்கினார்.
‘யுஆர் கிறிஸ்டியானோ’ என்ற அந்த புதிய யூடியூப் சேனலை தொ டங்கிய ரொனால்டோ, அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள் என்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். ரொனால்டோ சேனல் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாக ஒரு மில்லியன் பேர் அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து சாதனை படைத்தனர். இதனை தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ரொனல்டோவின் யூடியூப் சேனலை பின்தொடர்ந்தனர். இதனால் 24 மணிநேரத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற சேனல் என்ற சாதனையை ரொனால்டோவின் யுடியூப் சேனல் பெற்றது.
யூடியூப் நிறுவனம் இதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவருக்கு கோல்டன் பட்டனை வழங்கி கவுரவித்தது. இதனை தனது குழந்தைகளுடன் காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்ப்படுத்தினார். தற்போது வரை ரொனால்டோ சேனலில் 19 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், இச்சேனலை 38 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதனால் விரைவில் அவரது சேனல் 10 கோடி சப்ஸ்கிரைபர்கள் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் 626 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களையும், பேஸ்புக்கில் 170 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களையும், எக்ஸ் வலைதளத்தில் 112 .5 மில்லியன் சப்ஸ்கிரைபர்களையும் பெற்றுள்ள நிலையில், தற்போது யூடியூப் சேனலிலும் ரொனால்டோ ஆதிக்கம் செலுத்துவது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர் பட்டாளத்தின் பலத்தை வெளிப்படுத்தியுள்ளது.