Homeசெய்திகள்தமிழ்நாடுகடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

-

- Advertisement -

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

dengue

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குளிர்ந்த காற்று வீசுவதுடன், பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால், தற்போது அதில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. மேலும் பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்கிறது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மாவட்டத்தில் பெரும்பாலானோர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளிக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பும் வேகமெடுத்துள்ளது. கடலூருக்கு பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் நேற்று இரண்டு பெண்கள் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் 50 பேர் வரை புதுச்சேரி மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவு வேகம் அதிகரித்துள்ளது. கடலூர் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 பெண்களும், நெய்வேலி, முட்டத்தை சேர்ந்த 2 ஆண்களும், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்களும் என மொத்தம் 6 பேர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.

இதற்காக அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் அவர்கள் 6 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில் 6 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

MUST READ