பண்டைய தமிழர்களின் நாகரீகத் தொட்டில் என அழைக்கப்படும் தூத்துகுடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதற்காக அகழாய்வில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அகழாய்வில் கல்வட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியினை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்துவதற்காக திறந்து ஆய்வு செய்தனர். அந்த முதுமக்கள் தாழியானது இரண்டு மூடிகளுடன் இருந்தது. அந்த முதுமக்கள் தாழியினை திறந்த போது 2 பேரின் மண்டை ஓடுகள் . கை,கால்களின் எலும்புகள் போன்றவை இருந்துள்ளது.மேலும் சிறு பானைகள், இரும்பாலான உளியும் இருந்ததாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர.
முதுமக்கள் தாழியில் இருந்தது கணவன், மனைவி எலும்புக் கூடுகளாக இருக்கலாம் அல்லது தாய் குழந்தையின் எலும்புக்கூடுகளாகவும் , இருக்கலாம் என ஆய்வு செய்யப்படுகிறது என்றனர்.
இது தொடர்பாக தொல்லியல் துறை ஆர்வலர்கள் கூறும் போது,”கலம்செய் கோவே,கலம்செய் கோவே”,என்ற புறநானூற்றுப் பாடலில், போரில் கணவன் இறந்தால், அவரது உடலுடன் தன்னையும் சேர்த்து அடக்கம் செய்யுமாறு மனைவி கூறும் செய்தி உள்ளது.அந்த காலத்தில் இது போன்ற செயல்கள் நடைமுறையில் இருந்ததற்குச் இந்த ஒரே முதுமக்கள் தாழியில் 2 எலும்புக்கூடுகள் ஒரு சிறந்த சான்றாகவே நமக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தனர்.