தமிழக அரசியல் களம் தற்போது கொந்தளிப்பான சூழலில் உள்ள நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் தனது காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நிர்வாக அனுபவமின்மை மற்றும் ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கே தற்போதைய அரசியல் சூழலை இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிர்வாகத்தில் அனுபவமின்மை மற்றும் ஆணவம்
”முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு நிர்வாக அனுபவம் மிகவும் குறைவாக உள்ளது. அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுச் செயல்படுவதற்குப் பதிலாக, ரிவெஞ்ச் மோடிலேயே (பழிவாங்கும் உணர்வு) அரசு செயல்படுவது நல்லதல்ல. அமைச்சர்களின் பேச்சுக்கள் ஆணவத்துடனும், நக்கலாகவும் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தின் இன்றைய நிலை
நாளை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் மற்றும் பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ள நிலையில், அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதாகத் தெரிகிறது. “கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் வேட்டி உருவப்பட்டது போன்ற அவமானகரமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் தற்போது, ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிகளைச் சுமூகமாக நடத்தாமல், தங்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பவர்களை அடக்குமுறை மூலம் கையாள முயல்கின்றனர். இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல” என்றார்.

நடிகைகளை மையப்படுத்திய அரசியல்
அரசியல் களத்தில் நடிகைகளை மையமாக வைத்துப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதை அவர் கடுமையாக விமர்சித்தார். “இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், நடிகைகளை வைத்துக்கொண்டு அரசியல் மல்லுக்கட்டுவது தமிழகத்தின் தரத்தை உலக அரங்கில் தாழ்த்திவிடும். கொள்கை, கோட்பாடு என்ற அடிப்படைப் புரிதல் இல்லாமல், தனிநபர்களைக் குறிவைத்துப் பேசும் அரசியல் தரம் தாழ்ந்து போயுள்ளது” என அவர் வருத்தம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் மௌனம்
இந்த அரசு மெஜாரிட்டி இல்லாத, ஸ்திரமற்ற சூழலில் இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், “தோழமை கட்சிகள் கூட ஆளும் கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் மெத்தனமாக உள்ளன. உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் மற்றும் பிற அரசியல் சர்ச்சைகளில் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், பழிவாங்கும் நோக்கில் செயல்படுவது அரசுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்கும்” என்று எச்சரித்தார். மேலும், சீமான் போன்ற அரசியல் தலைவர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற அமைச்சர்கள், அவர்களை ஆணவத்தோடு அணுகுவது நகைப்புக்குரியது. தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், முதலில் தங்களின் நாவடக்கத்தையும், முதிர்ச்சியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது கூறியுள்ளாா்.
