சென்னையில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு விழாவில் நடிகர் சத்யராஜுக்கு “கலைஞர்”விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் வாழ்க்கை சரிதம் நூலை வெளியிட்டு, விழா சிறப்புரையாற்றினார்.
படி, “கலைஞர்”விருது நடிகர் சத்யராஜுக்கும், “ராஜ ரத்னா விருது” – திருப்பாம்புரம் T.K.S.மீனாட்சி சுந்தரத்துக்கும் வழங்கப்பட்டது. “இயல் செல்வம்” விருது – ஆண்டாள் பிரியதர்ஷினிக்கும், “இசைச் செல்வம்” விருது – முனைவர் காயத்ரி கிரீஷ்க்கும் வழங்கப்பட்டது. “நாதஸ்வரச்செல்வம்” விருது – திருக்கடையூர் T.S.M.உமாசங்கருக்கும், “தவில் செல்வம்” விருது – சுவாமிமலை C.குருநாதனுக்கும், “கிராமியகலைச் செல்வம்” விருது – முனைவர் தி.சோமசுந்தரத்துக்கும், “நாட்டியச்செல்வம்” விருது – பார்வதி ரவி கண்டசாலாவுக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழ் கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த முத்தமிழ் பேரவை இவ்வளவு பெருமையுடன் இருக்கிறது என்றால் அவரால் துவக்கப்பட்ட அமைப்பு என்பதால் தான் என்று தெரிவித்தார். கலைஞர் பெயரில் விருது பெறுவது பெருமையாக உள்ளதாக நடிகர் சத்யராஜ் கூறினார், ஆனால் அவருக்கு விருது வழங்குவது தனக்கு பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், விருது பெற்றுள்ள அனைவரும், முத்தமிழ் பேரவை வழங்கியுள்ள விருது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே வழங்கிய விருது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.