பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.77.11 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, 40 ஆயிரம் நபருக்கு பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நேற்று நான் ஒரு பட்டாசுத் தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். அப்போது, அங்கிருந்த பணியாளர்களை சந்தித்தேன். அவர்கள் சில கோரிக்கைகள் வைத்தார்கள். அதன் அடிப்படையில், ஒரு முக்கியமான அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்! இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக்கூடிய வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ், இதற்கான ஒரு தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இதற்கான
முதற்கட்ட உதவியாக 5 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
விருதுநகர் மாவட்டத்தில், எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற வகையில், இந்த மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு முடிவு செய்தது. அருப்புக்கோட்டை அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில், 350 கோடி ரூபாய் செலவில், இந்த புதிய சிப்காட் தொழில்வளாகம் அமைக்கப்படும். இதனால்,
இந்தப் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.