கலைஞர் நூலக கட்டுமானப் பணிகள் தற்போது, 90% நிறைவுப் பெற்றுள்ளது. இந்நிலையில், 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போலவே, மதுரையில் புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் 7 அடுக்கு மாடிகளுடன் அமைக்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் ஆரம்பித்து தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
8 தளங்களுடன் நவீன வசதிகள் கொண்டு கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படுகிறது.
இதில், கட்டடத்திற்கு 99 கோடி ரூபாயும், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாயும், கணினி வாங்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் வெகமாக நடைப்பெற்று வருகிறது.

அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடம், தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில், கலைஞர் நூலக கட்டுமான பணிகள் 90% நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நூலகம் திறக்கப்படலாம் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று நூலகத்தை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.