வீட்டில் பிரசவம் பார்ப்பதை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரத்த பரிமாற்றத்திற்கான பிரத்தியேக வலைதளப் பக்கத் தொடக்க விழா சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்து, தானும் ரத்த தானம் செய்தார். தொடர்ந்து, ஆண்டில் 50 முறை ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்குச் சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கிப் பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:
வீட்டுப் பிரசவம் குற்றச்செயல்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது. இது போன்ற சம்பவங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 100 சதவீதம் மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் நடக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. வீட்டில் பிரசவம் பார்ப்பதை ஒரு மிகப் பெரிய குற்றச்செயலாகவே கருத வேண்டும். இந்த ஆபத்தான முறையை முற்றிலும் ஒழிக்க, முதலமைச்சருடன் கலந்து பேசி விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ரத்த தான முகாம்கள்:
ஒருவர் ரத்த தானம் செய்வதன் மூலம் நான்கு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். அவசர காலத்தில் குறிப்பிட்ட மாற்றுப் பிரிவு ரத்த தானங்களைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக முன்கூட்டியே ரத்த தான முகாம்களை நடத்தி ரத்தத்தைச் சேமித்து வைக்க மருத்துவர்கள் பழக வேண்டும். ஒவ்வொரு மாதமும் முறையான அட்டவணை தயாரித்து கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பேசி, வருடம் முழுவதும் தடையின்றி ரத்தம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இளைஞர்களுக்கு அறிவுரை:
இளைஞர்கள் போதை கலாச்சாரத்தில் சிக்காமல், ரத்த தானம் போன்ற சமூக நலப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் போதைப் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், நோய் தொற்றுகளைத் தடுக்கும் வகையில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரத்தை அனைவரும் பேணிக் காக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
