ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் விபரீதம்- அமைச்சர் மூர்த்தி
ரயில் விபத்து நடந்த பகுதியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் திரு மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி, “ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கியுள்ளனர். மொத்தம் 55 பேர் பயணம் செய்த நிலையில், காலை 4:30க்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களை போல கொள்ளையர்கள் ரயிலில் ஏறி விடுவார்கள் என்கிற அச்சத்தில் ரயில் பெட்டியை பூட்டி வைத்துள்ளனர். அதனால் தீ பற்றியபோது, அவர்களால் வெளியேற முடியவில்லை. காலை டீ செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைத்த போது தீவிபத்து நேரிட்டுள்ளது. 9 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஒருவரது உடல் அடையாளம் காணப்படவில்லை” என்றார்.
உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா இரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை இரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சமும், தெற்கு ரயில்வே சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.